- எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு.
உலகில் புத்தகங்களுக்கு எத்தனை சிறப்பு இருக்கிறதோ, அத்தனை பெருமை கொண்டது நூலகங்கள். கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாகவும் நூலகங்கள் திகழ்கின்றன.
இத்தகைய சிறப்புப் பெற்ற நூலகங்கள் தமிழ்நாட்டில் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளன என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அந்த காலத்தில் நூலகங்கள் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், சிதம்பரத்தில் 850 ஆண்டுகளுக்கு முன்பே சோழர் ஆட்சி காலத்தில் செயல்பட்ட 'சரஸ்வதி பண்டாரம்' குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சரஸ்வதி பண்டாரம் எனும் நூலகம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் செயல்பட்டு வந்த சரஸ்வதி பண்டாரம் குறித்து இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார்.
"சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரை பிரித்து பொருள் கொண்டால் சரஸ்வதி என்பதற்கு கல்விக்கடவுள் என்றும் பண்டாரம் என்பதற்கு கருவூலம் என்றும் பொருளாகும். இதை கல்வி கடவுளின் கருவூலம் என்று குறிப்பிட முடியும் .
இதற்கு கலைமகளின் பொக்கிஷம், ஞான பீடம், சரஸ்வதி நூலகம், நூல் நிலையம், புத்தக ஆலயம், புத்தகச்சாலை முதலிய பொருளும் உண்டு. சரஸ்வதி பண்டாரத்தில் வரலாற்று காலத்தைச் சார்ந்த ஓலைச்சுவடிகளை சேகரித்தும் தொகுத்தும், நகலெடுத்து எழுதியும், பாதுகாத்து பராமரித்தும், வந்துள்ளனர். இதைப் பற்றி சிதம்பரம் கல்வெட்டுகள் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்" என்றார் அவர்.
என்ன மொழியில், எந்தெந்த நூல்கள் இருந்தன?
சிதம்பரம் கோவிலில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதிராசரின் காலம் (கிபி 1163 -1178) "ஸ்வஸ்தி ஸ்ரீ ஸரஸ்வதி பண்டாரத்துக்கு … " எனத் தொடங்கும் கல்வெட்டு ஒன்றில் சரஸ்வதி பண்டாரம் இருந்துள்ளதை குறிப்பிடுகிறது.
அந்த கல்வெட்டு குறித்து விவரித்த முனைவர் வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "சரஸ்வதி பண்டாரத்தில் சுவாமி தேவர் (அரச குரு) எழுதிய புத்தகங்கள் மற்றும் சித்தானந்தகாரா என்ற கிரந்த புத்தகங்களும் (சமஸ்கிருதம்) வைக்கப்பட்டிருந்துள்ளன. இந்த நூல் நிலையத்தில் ஓலைச்சுவடிகளை நகலெடுத்து எழுதுவதற்கும் அவற்றை அவிழ்த்து கட்டுவதற்கும், கோர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மெய் காப்பாளர்கள் உள்ளிட்ட பலநிலை பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்த நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை தமிழிலும் கிரந்தத்திலும் பிரிதொரு நகலெடுத்து அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து விக்கிரமச் சோழரின் மாளிகையில் உள்ள நகல் பாதுகாக்கும் இடத்தில் வைத்திருந்துள்ளனர். இங்கு பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரர்கள் அதாவது நூலகர்கள் மற்றும் திருக்கோயில்களில் திருமுறை ஓதுகின்ற திருக்கை ஓட்டிகள் முதலானவர்கள் செய்கின்ற பணிகளுக்கு (பார்வைக்காக) முதலாக வைக்க வேண்டியுள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன." என்று தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ் - பாஜக மோதலா? பாஜக தனித்து இயங்க தீர்மானித்தால் என்ன ஆகும்?
மியான்மரில் ராணுவம், கிளர்ச்சிப்படை இரு தரப்பையும் சீனா ஆதரிப்பது ஏன்?
பணியாளர்கள் விவரம்
சிதம்பரம் கோவிலில் பாண்டிய மன்னர் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியன் காலத்து (கி.பி. 1251-1270) கல்வெட்டில் சரஸ்வதி பண்டாரத்தை பற்றியும் இதில் பணியாற்றியுள்ள பணியாளர்களை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுகுறித்து குறிப்பிட்ட வஞ்சியூர் க.பன்னீர்செல்வம், "இதில் பல கிரந்தங்களை படிப்பதற்கும், பார்ப்பதற்கும், எழுதுவதற்கும், நகலெடுப்பதற்கும், அவிழ்த்து கட்டுவதற்கும், ஓலைச்சுவடிகளை படிக்கவும், நகலெடுத்த ஓலைச்சுவடிகளை வாய்விட்டு படித்து ஒப்பிட்டு பார்க்கவும் முறையாக அடுக்கி கோர்த்து பாதுகாத்து வைப்பதற்கும் 20 பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
இந்த கிரந்தங்களை எழுதி சேர்க்கும் பணியில் இச்சரசுவதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள 10 பணியாளர்களுடன் புதிதாக 10 பணியாளர்களை பணியமர்த்தவும் செய்துள்ளனர். இவர்கள் ஓலைச்சுவடிகளை புதிய நகலெடுத்து எழுத வேண்டும் என்று அவர்களின் பணி விவரமும் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
தென் ஆப்ரிக்காவை மிரட்டிய நேபாளம் - கைக்கெட்டிய வெற்றியை கடைசிப் பந்தில் நழுவ விட்டது எப்படி?
வளைகுடா வேலை: தொழிலாளர்களை மட்டுமின்றி, அரபி முதலாளிகளையும் ஏமாற்றும் முகவர்கள் - எப்படி?
நூலகத்திற்காக நிலதானம்
சிதம்பரம் நடராஜர் கோவிலின் முதல் பிரகாரத்தின் தெற்கு பக்கம் சுவற்றில் முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியரின் 13-ஆம் ஆட்சி ஆண்டில் (கிபி 1264) பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டிலும் சரஸ்வதி பண்டாரம் பற்றிய செய்தி வந்துள்ளது.
இதில் ராசாதி ராச வளநாட்டில் அமைந்திருந்த தனியூர் பெரும்பற்ற புலியூரில் நாயனார் பெயரால் அகரம் விக்கிரம பாண்டிய சதுரவதி மங்களம் ஒன்றை, வேதமும் சாஸ்திரமும் நன்கு அறிந்திருந்த 108 பிராமணர்களுக்கு இம்மன்னர் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
இங்கு அமைந்திருந்த சரஸ்வதி பண்டாரத்தில் பணியாற்றியுள்ள சரஸ்வதி பண்டாரத்தருக்கும் நிலக்கொடை கொடுத்துள்ளார். மேலும் அந்த நிலங்களையும் நிர்வாகம் செய்துள்ளனர் என்பது பற்றிய கல்வெட்டு தகவலை பன்னீர்செல்வம் விளக்கினார்.
நூலகம் அமைந்திருந்த இடம்
தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் சரஸ்வதி பண்டாரம் என்று அழைக்கப்பட்ட நூலகம் இருந்த இடம் குறித்தும் கல்வெட்டு தகவல் அடிப்படையில் அவர் விளக்கினார்.
"சிதம்பரம் நடராசர் கோவில் மேற்கு கோபுரம் அமைந்துள்ள பகுதியில், சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்குப் பக்கத்தில் காணப்படுகின்ற மண்டபத்தின் அடிப்பகுதியில் சோழ மன்னர் இரண்டாம் ராசாதி ராசனின் கால (கி.பி. 1163- 1178) கல்வெட்டு ஒன்றில், இது குறித்த தகவல் உள்ளது.
அதன்படி, ராசாதி ராசரின் மாளிகையின் மேற்கு பக்கத்தில் உள்ள சுப்பிரமணிய பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் உள்ள மண்டபத்தில் சரஸ்வதி பண்டாரம் அமைந்திருந்தது.
இதில் சுவாமி தேவர் எழுதிய புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நூல் நிலையத்தில் பலர் பணியாற்றியுள்ளனர் என்பது குறித்த விவரமும் உள்ளன." என்றார் அவர்.
வாரணாசியிலும் குஜராத்திகள் ஆதிக்கமா? மோதி பின்னடைவு பற்றி மக்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு
பாகிஸ்தானை வெளியேற்றியது அமெரிக்கா: இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு சூப்பர் 8 வாய்ப்புள்ளதா?
பணியாளர்கள் பெயர் மற்றும் ஊதியம் - கல்வெட்டு தகவல்
சிதம்பரம் கோவில் சரஸ்வதி பண்டாரத்தில் உள்ள பணிகளை நின்மை ஆட்கொண்டான் பட்டன், கௌதமன் உய்யக்கொண்டான் பட்டன், மணலூர் கிழவன் திருஞானசம்பந்தம் திருச்சிற்றம்பலம் உடையான், புல்லூருடையான் திருநீலகண்டன், ஆரியன் இராமப்பட்டன் ஆகியோர் செய்துள்ளனர்.
இவர்களுக்கு நாள் கூலிக்கும், சீருடைகளுக்கும் ஆண்டுக்கு ஒன்று நெல்லாகவும், காசாகவும் ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது.
நகலெடுத்து எழுதுபவர்கள் நாள் ஒன்றுக்கு நெல் தூணியும் (ஆண்டுக்கு 365 தூணி (2பதக்கு = ஒரு தூணி நெல்லும்) மற்றும் நான்கு காசுகளும் கொடுக்கப்பட்டது. மெய் காப்பாளர்கள் மற்றும் கோர்ப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நெல் பதக்கு நாழியும் (ஆண்டுக்கு 365 பதக்கு நாழி, (2 குருணி= ஒரு பதக்கு, 4- உழக்கு= ஒரு நாழி)) ஆண்டுக்கு 3 1/2 காசுகளும் கொடுக்கப்பட்டன.
நூலகத்தில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக சிதம்பரம் அருகே விஸ்வாதிக்க விவேகமங்கலம் என்ற ஊரில் 27- வேலி, (6.17 ஏக்கர் = ஒரு வேலி) 2 மா (1 குழி = 12 அடி *12 அடி144 சதுர அடி,100 குழி = ஒரு மா), அரைக்காணி முந்திரிகை (3/320 – அரைக்காணி முந்திரி) நிலத்தை ராசாதி ராசர் இறையிலியாக (தானமாக) கொடுத்துள்ளார். இந்த நிலத்திலிருந்து வருகின்ற 820 -கலம் நெல்லையும் மூன்று கூறிட்டு (ஒரு கூறு 273.3 கலம்) நூலகத்திற்கு கொடுக்கச் சொல்லி உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)